ஊழல் நாற்றம் அதிமுக அரசு
தீக்கதிர், 18.10.2018
இந்தியாவிலேயே
முதலமைச்சராக பதவியில் இருக்கும்போதே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தண்டனை
பெற்று சிறைக்கு சென்றவர் ஜெயலலிதா. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்த
ஜெயலலிதா சிறைக்கு போனபோது (டம்மி) முதல்வராக ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். அதே
அதிமுகவில் இருந்து தற்போது முதல்வராக உள்ளவர் எடப்பாடி பழனிசாமி.
பொதுப்பணித்துறையே இவர்வசம்தான் உள்ளது. பொதுப்பணித்துறையை தனது உறவினர்களுக்கே
ஒதுக்கி சுமார் 4500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளதாக திமுக புகார் எழுப்ப,
உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி பதவியில் இருக்கும் முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு
தடுப்பு பிரிவினர் விசாரணை செய்கின்றனர். அந்த விசாரணை முடிவை ஏற்றுக் கொள்ளாத
நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.முதல்வர் குற்றம்
செய்யாதவராக, நேர்மையானவராக இருந்திருந்தால் தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை
ராஜினாமா செய்திருக்க வேண்டும். குற்றச்சாட்டில் எந்த முகாந்தரமும் இல்லை. தான்
நிரபராதி என நிரூபித்துவிட்டு மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றிருக்க வேண்டும்.
அப்படி ராஜினாமா செய்தால் முதல்வர் பதவி ஓபிஎஸ்-சிடம் போய்விடும் என்பதால்
முதல்வர் மவுனம் காக்கிறார்.
எடப்பாடி மட்டும்தான் ஊழல் செய்தாரா?
ஓபிஎஸ்-சின் நெருங்கிய நண்பரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான
சேகர்ரெட்டி வீடு, அலுவலகத்தில் ரெய்டு செய்த வருமானவரித்துறை, அவரது
வீட்டிலிருந்து 96 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், 24 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய்
நோட்டுகள், மற்ற டினாமினேஷனில் 9.63 கோடி ரூபாய் பணம், 127 கிலோ தங்கம் அதோடு ஒரு
டைரியும் கண்டெடுத்தது. இந்த டைரியில் போக்குவரத்துத் துறை அமைச்சர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர்கள்
வேலுமணி, தங்கமணி, தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் என பெரிய பட்டியலே இருந்தது.
அதனடிப்படையில் அப்போதைய முதல்வர் ஓபிஎஸ் தலைமை செயலகத்தில் இருக்கும்போதே, தலைமை
செயலாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அங்குதான்
மணல்கொள்ளைக்காக சேகர் ரெட்டி மாதா மாதம் 120 கோடி ரூபாய் போயஸ்கார்டனுக்கு
கொடுத்ததற்கான ஆதாரங்களை எடுத்துள்ளனர்.சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
வீட்டில் ரெய்டு நடத்தினால் 5 கோடி பணம், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்
வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் யார் யார் மூலம் கொடுக்கப்பட்டது, எப்படி
கொடுக்கப்பட்டது, எந்த அமைச்சர் எந்த எந்த வட்டத்தில் கொடுக்க வேண்டும் என
பட்டியல் கொண்ட டைரியை எடுத்தனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்க
ஒவ்வொரு மாதமும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு 14 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததை
குட்கா ஆலை முதலாளி மாதவ்ராவ் வாக்குமூலமும் தந்துள்ளார். அதற்கான டைரியையும்
வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த டைரியில் காவல்துறை தலைவரும்,
அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையரும் சிக்கினர். இவர்களது வீட்டிலிருந்தும்
ஏராளமான ஆதாரங்களை வருமானவரித்துறை கண்டெடுத்துள்ளது.உணவுத்துறை அமைச்சராக
இருக்கிற காமராஜ், லஞ்சம் பெற்றுள்ளதாக அதிமுக-வை சேர்ந்த புகழேந்தி (அ.ம.மு.கழக
கர்நாடக பொறுப்பாளர்) பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகிறார். குறிப்பாக ஏழை
குழந்தைகளுக்கு கொடுக்க சத்துணவு மையத்திற்கு வாங்கக்கூடிய முட்டையில் ஊழல்
செய்ததையும், பருப்பு வாங்குவதில் சுமார் 250 கோடி ஊழல் நடந்துள்ளதையும்
அம்பலப்படுத்தினார். முட்டை, பருப்பு கொள்முதல் செய்ய நீதிமன்றமும் இடைக்கால தடை
விதித்தது. ஆக, தமிழகத்தின் முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் ஊழல்
விசாரணை வளையத்தில் உள்ளனர். இதுதான் தமிழக அரசின் இன்றைய நிலை.
லஞ்சம் ஊழல் தடுப்பு பிரிவினரின் சோதனையில்...
முதல்வர் எடப்பாடியின் உறவினர்கள் மற்றும் பொதுப்பணித்துறை
ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையில் 180 கோடி ரொக்கமும் 100
கிலோவுக்கு அதிகமான தங்கமும் கிடைத்துள்ளது. முன்னேர் எப்படி போகிறதோ அப்படித்தான்
பின்னேரும் போகும் என்பார்கள் அதுபோல தமிழகத்தில் முதல்வர் துவங்கி அனைத்து
அமைச்சர்களும், தலைமை செயலாளர் துவங்கி அதிகாரிகளும், தமிழ்நாடு காவல்துறை தலைவர்
துவங்கி காவல்துறையினரும், ஆளுநர் துவங்கி துணைவேந்தர்கள் வரையிலும் ஊழலில்
திளைக்கின்றனர்.
மாதா, பிதா, குரு, தெய்வம்
சமூகத்தில் நல்ல ஒழுக்கங்களையும், அறநெறிகளையும் போதிக்க வேண்டிய
ஆசிரியர் பெருமக்கள் ஊழல்வாதிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும் இருந்தால்
மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் அ.கணபதி,
பேராசிரியர்கள் நியமனம் செய்வதற்கு கோடிகோடியாக லஞ்சம் வாங்கியது அவ்வப்போது
பத்திரிகையில் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 30 லட்சம் ரூபாய் லஞ்சம்
வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். பேராசிரியர் நிர்மலாதேவி தனது மாணவிகளை
பாலியல் வற்புறுத்தல் செய்தது தமிழகத்தையே உலுக்கியது.அண்ணா பல்கலைக்கழகம் உலக
அளவில் புகழ்பெற்றது. இதில் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வைக்க மாணவர்களிடம்
லட்சம் லட்சமாக பணம் வாங்கிக் கொண்டு மார்க் போட்டுள்ளனர். இதை ஆய்வு செய்தால்
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இந்த முறைகேடு பல ஆண்டுகளாக நடந்து வருவது
அம்பலமானது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். தேர்வு
கட்டுப்பாட்டுத் தலைவராக இருந்த பேரா.உமா இதில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய கைவரிசையை
காட்டியுள்ளதாக செய்திகள் அம்பலப்படுத்துகின்றன. இப்படி அதிமுக அரசும், அரசு
நிர்வாகமும் மிகப்பெரிய அளவில் வெளிப்படையாகவே கூச்ச நாச்சமின்றி ஊழல்
செய்கின்றனர் .
எரியும் வீட்டில் பிடுங்கியதுவரை லாபம்
பன்னாட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின்
அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூட
வேண்டும்: தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும், 8 வழிச்சாலைக்கு
எதிராக திருவண்ணாமலை, தருமபுரி, காஞ்சிபுரம், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து
மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன்
திட்டத்தை எதிர்த்தும், கடலோர மாவட்ட மக்கள் சாகர்மாலா திட்டத்திற்கு எதிராகவும்
போராடிக் கொண்டிருக்கின்றனர். மேற்கு மாவட்ட விவசாயிகள், தங்களது நிலங்களில்
புதைக்கப்படும் உயர் மின்னழுத்த கோபுரம் மற்றும் கெயிலுக்கு எதிராக
போராடுகின்றனர். இதைப்பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில்
ஊழல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.1991-1996 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா
தலைமையிலான அரசு டான்சி ஊழல், சுடுகாட்டு கொட்டகையில் ஊழல், மாணவர்களுக்கு வாங்கிய
இலவச செருப்பில் ஊழல் என ஊழல் முடைநாற்றம் வீசியது. 1996 ல் நடந்த தேர்தலில் அந்த
அரசு துடைத்தெறியப்பட்டதோடு, ஜெயலலிதா போட்டிபோட்ட 2 தொகுதியிலும் டெபாசிட்
இழந்தார். அதேபோன்று 2019 தேர்தலில் அதிமுகவும் அதோடு சேர்ந்த மக்கள்
விரோதசக்தியான பாஜகவையும் தமிழக மக்கள், வேறோடும் வேறடி மண்ணோடும் களைந்து
எறிவார்கள்.
கட்டுரையாளர் :
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
No comments:
Post a Comment